Connect with us

அரசியல்

நெற்பயிர்களை அழித்து, அவர்களது வயிற்றில் அடிக்கும் என்.எல்.சி – சசிகலா கண்டனம் !

Published

on

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, மேல் வளையமாதேவி பகுதியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி நிர்வாகம் தொடங்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்களை அழித்து, அவர்களது வயிற்றில் அடிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு பாதுகாப்பு அரணாக துணை நிற்கும் திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்.எல்.சி. நிர்வாகம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.

இதற்கு பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்நிலையில் என்.எல்.சி. நிர்வாகத்தால் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட இடங்களான சேத்தியாதோப்பு, வளையமாதேவி சுற்று வட்டார பகுதிகளில், இன்னும் இரண்டு மாதத்திற்குள் நெற்பயிர்கள் அறுவடை செய்ய இருக்கும் நிலையில் இன்று அதிகாலையிலேயே 35 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணியை தொடங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் விவசாயிகள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நெற்பயிர்களை சாகுபடி செய்து வரும் சூழலில், அவர்களின் கருத்துக்களை அறிந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடாத வகையில் என்.எல்.சி நிர்வாகம் செயல்படவேண்டும். திமுக அரசும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் என்.எல்.சி நிர்வாகத்திடம் கலந்து பேசி விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, தமிழக அரசே விவசாயிகளுக்கு எதிராக நடப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை. இதற்காகவா மக்கள் வாக்களித்தனர். எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு என்.எல்.சி நிர்வாகத்தின் அத்துமீறல்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல்

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன்!

Published

on

By

“சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன். தற்போது பாஜகவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன் தமிழ்நாட்டில் பாஜகவை வலுபெற வைப்போம்;

தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது;

பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது”

டெல்லியில் காங்.கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விளவங்கோடு  விஜயதரணிஎம்.எல்.ஏ பேட்டி

Continue Reading

அரசியல்

தமிழக பட்ஜெட்டின் முக்கிய சில அம்சங்கள்!

Published

on

By

வறுமையை ஒழிக்கும் தாயுமானவர் திட்டம்! தமிழ்நாட்டில் பன்முக வறுமை குறியீட்டின் கீழ் உள்ள 2.2% ஏழை மக்களுக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்படும்.

மூன்றாம் பாலினத்தவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்! அரசு கூர்நோக்கு இல்லங்கள் இனி ‘குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை’ என்று பெயர் மாற்றப்பட்டு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

கொற்கை மற்றும் சங்ககாலப் பாண்டியரின் துறைமுகமான அழகன்குளம் பகுதிகளின் கடலோரங்களில் 65 இலட்சம் ரூபாய் செலவில் முன்கள ஆய்வும், ஆழ்கடல் ஆய்வும் மேற்கொள்ளப்படும்.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் காலச் சுவடுகளைத் தேடி கேராளவில் உள்ள முசிறி, ஒடிசாவில் உள்ள பாலூர், ஆந்திராவில் உள்ள வெங்கி, கர்நாடகத்திலுள்ள மஸ்கி ஆகிய தொல்லியல் சிறப்புமிக்க இடங்களிலும் இந்த ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

தமிழ்ப் புதல்வன் திட்டம்! அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் ரூ 1000! 2024 – 2025 நிதியாண்டிற்கு ரூ 360 கோடி ஒதுக்கீடு!

கலைஞரின் கனவு இல்லம்! 2024 – 2025 ஆம் ஆண்டு ஒரு இலட்சம் புதிய வீடுகள்! ரூ 3,500 கோடி நிதி ஒதுக்கீடு!

கல்வி பெற்ற சமூகம் புதிய சிந்தனைகளையும், சமூகநீதி உலகையும் உருவாக்கும் சமூகமாக திகழும். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ 44,042 கோடி நிதி ஒதுக்கீடு!

மேலும் 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம்!

சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களில் மேலும் 3 புதிய தோழி விடுதிகள்!

கோயம்புத்தூரில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா! தூத்துக்குடியில் புதிய விண்வெளி தொழில் & உந்துசக்தி பூங்கா!

வடசென்னை வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ 1,000 கோடி ஒதுக்கீடு!

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் மாதம் ரூ 1000 புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம்!

500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு!

 

 

Continue Reading

அரசியல்

எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தும் காலம் நெருங்கிவிட்டது; -டிடிவி தினகரன்

Published

on

By

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாபெரும் மக்கள் சக்தியைக் கொண்ட எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்களுக்கும், மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்.. என சூளுரைத்து ஏழை, எளிய மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஜெயலலிதாவின் விசுவாசமிக்க உண்மைத் தொண்டர்களுமாகிய தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் எனது இதயம் நிறைந்த அன்பு வணக்கங்கள். தமிழ்நாட்டை இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுகவை ‘தீய சக்தி’ என்று சொன்ன எம்ஜிஆரும், அம்மாவும்

தங்கள் காலம் வரை திமுகவை தலைதூக்கவிடாமல் தமிழக மக்களை பாதுகாத்து வந்தனர்.

அம்மாவின் மறைவுக்கு பிறகு சில துரோகிகளாலும், சில சுயநலவாதிகளாலும் அம்மாவின் மக்கள் நல ஆட்சிக்கு முரணான வகையில் சிலர் செயல்பட்டதாலும் தீயசக்தியான திமுக அரியணை ஏறியது. எனக்கென்று எந்த ஒரு தனிப்பட்ட வாழ்க்கையும் கிடையாது. என் உயிரினும் மேலான என் அருமை கழகக் கண்மணிகளும், என் மீது அன்பு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழ் நாட்டு மக்களும் தான் எனக்கு சொந்தம் எனக்கூறிய அம்மாவின் வளர்த்த இயக்கம், இன்று கயவர்களின் கரங்களில் சிக்கித் தவிக்கிறது.

அம்மாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்ற கடமையை முன்னிறுத்தித்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது. எதிரிகளோடு சேர்த்து துரோகிகளையும் எதிர்கொள்ள வேண்டிய காலச்சூழல்தான் நமக்கு இப்போது உருவாகியுள்ளது. ஒரு சிலரின் சதித் திட்டங்களால் தேர்தல்களில் பெரிய அளவிலான வெற்றிகளை நம்மால் பெற முடியவில்லை என்றாலும், இன்னும் எத்தனை எத்தனை தேர்தல்கள் வந்தாலும் களத்தில் நின்று மக்களைச் சந்தித்து வெற்றி பெறும் திறனை இறைவன் நமக்கு வழங்கியிருக்கிறார். உடலெங்கும் குருதியைக் கொண்டு சேர்க்கும் நரம்புகளைப்போல, கழகத்தின் பெருமைகளைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் சக்திதான் நீங்கள். நம்மை அழித்துவிடுவோம், ஒழித்துவிடுவோம் என்கின்றனர். அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் நாம் என்ன மண் பொம்மைகளா? போர்க்குணம் கொண்ட ஜெயலலிதா அவர்களின் பிள்ளைகள் அல்லவா? எத்தனையோ சோதனைகளைச் சந்தித்திருந்தாலும், சோர்ந்துவிடாமல் இமயமாக உயர்ந்து நிற்கிறோம். எதிரிகளையும் துரோகிகளையும் களைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அவர்களைப் அவர்களைப் புறக்கணிக்க மக்கள் தயாராகிவிட்டனர்.

இது நமக்கான காலம். தமிழ்நாட்டின் எதிர்காலம் நாம்தான் என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். ஒரு சில சுயநலவாதிகள் சுயலாபத்திற்காக நம்மை விட்டுப் பிரிந்து சென்றாலும், உண்மையான கழகத் தொண்டர்கள் அனைவரும் எந்தவித பலனும் எதிர்பாராமல் உழைத்துக் கொண்டிருப்பதை நான் நன்கு அறிவேன். அதை என்றும் நான் நினைவில் கொள்வேன். விசுவாசமிக்க தூய தங்கங்களே… எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறது. களம் காண்பதில் களைப்பறியா தீரர்கள் நாம். நம்மால் முடியாதது எதுவுமில்லை. இனிவரும் காலங்களில் நீங்கள் வெற்றிச் செய்திகளை மட்டுமே கேட்பீர்கள். அதற்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். எதிர்வரும் மக்களவைத் தேர்தல் வெற்றி மூலம் நாம் யார் என்பதை உலகறியச் செய்வோம். அம்மாவின் கோட்டையாக விளங்கிய கோவை தற்போது எதிரிகள் மற்றும் துரோகிகளின் கூடாரமாக மாறியுள்ளது. தற்காலிகமாக குடி கொண்டிருக்கும் அவர்களை அகற்றிவிட்டு, கோவை என்பது அம்மாவின் உண்மைத் தொண்டர்களின் கோட்டை என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகவே வரும் 21ஆம் தேதி காலை 9 மணியளவில், கோவை, சின்னியம்பாளையத்திலுள்ள ‘பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில்’ நடைபெற உள்ள கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன். அந்தநாள் எப்போது என ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் எழுச்சியும் தன்னம்பிக்கையும் நிச்சயம் நம்மை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. மக்களைச் சந்திப்போம், உங்களோடு நானும் வருகிறேன். புதிய சரித்திரம் படைக்க புறப்படட்டும் ஜெயலலிதா அவர்களின் இந்தப் படை. “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் ஆயத்தமாவோம்!” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending