கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய திருக்கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மலைப்பகுதியில் கோவில் உள்ளதால் வன விலங்குகளான யானை சிறுத்தை , மான், கரடி போன்ற விலங்குகள் படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழியாகவும் அடிக்கடி வந்து செல்கின்றனர். இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவில் நிர்வாகம் சார்பாக சாலை வழிகள் படிக்கட்டுகள் வழிகள், கோவில் வளாகம் போன்ற பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்கணிக்கப்படுகிறது .
மேலும் வனத்துறை சார்பாக மலைக்கோவிலுக்கு செல்ல கூடிய பக்தர்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை இரு சக்கர வாகனங்களும் , 6:30 மணி வரை நான்கு சக்கர வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவரின் காரின் முன்பு முதல் வளைவில் சிறுத்தை ஓடியது. வாகனத்தின் வெளிச்சத்தை கண்ட சிறுத்தை சிறிது தூரம் ஓடி பின்பு வனப்பதுதிக்குள் சென்று மறைந்து விட்டது. அதனை அவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.