கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மலையேறி சிவனை தரிசிப்பது வழக்கம் . இந்த ஆண்டு பக்தர்கள் செல்ல பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி வரும் நிலையில் எதிர்பாராத விதமாக இருவர் கடந்த வாரம் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நேற்று வெள்ளியங்கிரி மலையை ஏறிய ஹதாரபாத்தை சேர்ந்த சுப்பாராவ்(68) நான்காவது மலையில் ஏறி கொண்டிருந்த நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கபட்டு உயிரிழந்தார்.
இதேபோல் சேலத்தை சேர்ந்த தியாகராஜன்(35) என்பவரும் உடல்நிலை பாதிக்கபட்டு முதலாவது மலைப்பாதையில் உயிரிழந்தார். இன்று அதிகாலை 4 மணி அளவில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன்(46) இரண்டாவது மலை அருகே உயிரிழந்து உள்ளார்.
2 நாட்களில் 3 பேர் என இந்தாண்டு மொத்தம் 5 பேர் மலையேறுகையில் உயிரிழந்துள்ளனர். வெள்ளிங்கிரி மலையில் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் வனத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை அறிவுரைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .
அதன்படி, கொரோனா பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றவர்கள், இதய நோய், மூச்சு திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயதானோர், உடல்நிலை சரியில்லாதவர்கள், மலை ஏறுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.